Friday 23 March 2018

வரமளித்த சாபங்கள்

சொல்லியும்
சொல்லாமலும்
புரிய வைத்தாயிற்று.

ஏற்பதா?
நழுவி விடுவதா?
எதுவும் இறுதியில்லை.

காலச் சக்கரம்
நிதானமாய் சுழன்றதில்
யாவும் நீர்த்துப்போயின.

எல்லாமுமான
நினைவுகள்
தூர்க்கப்பட்ட
கிணறாக மாறிற்று.

நிலைக்காது எனத் தெரிந்தும்
அடைகாக்கத் துடிக்கிறது
நெஞ்சம்.

எதையும் வெளியாக்காத
மெல்லிய புன்னகை
சிறு பார்வை
அருகாமையில்
துள்ளிக் குதிக்கும்
மனத்தை  என்னவென்று சொல்ல.

நிழல் தொட
பதறிய மனம்
உள் நுழைந்து
வியாபித்து
பூரணமாய்
சுவீகரித்துக் கொண்டது.

உளறல்களுக்கு
அடர்த்திக் கூடி
முனகல்களில்
பொருளாழம் நிரம்பின.

கடந்து விடுமோவென
ஏங்கிய கணங்களும்
எப்போது கடக்குமென
உந்தித் தள்ளிவிட முயன்ற
நொடிகளும்
நினைவுக் கூண்டில்
பத்திரமாயுள்ளன.

மாதிரிகளாக்க
முனைந்து முனைந்து
அலங்கோலமாயின
யாவும்.